செம்மொழி மாநாடு: ஆன்மிக தலைவர்களை அழைக்க இ.முன்னணி கோரிக்கை
சென்னை: தமிழும் பக்தியும் இரண்டறக் கலந்தவை என்பதால் கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாட்டுக்கு ஆன்மிகத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அறிவித்திருப்பதை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.
தமிழ் இலக்கியங்களை இளைஞர்கள் விரும்பிக் கற்பதை முன்னிறுத்தி இம்மாநாடு அமைய வேண்டும். தமிழும் பக்தி ஆன்மிகமும் இரண்டறக் கலந்தவை.
இதனைக் கருத்தில் கொண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பக்தி ஆன்மிகத்திற்கு அரங்குகள் அமைத்திட அரசு ஆவன செய்ய வேண்டும்.
மேலும் கன்னியாகுமரி வெள்ளிமலை ஸ்ரீசைதன்ய மகராஜ், ஸ்ரீரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர், வேலூர் நாராயணி சக்தி, ஊரன் அடிகள், தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண மடம், சின்மயா மிஷன் போன்ற ஆன்றோர் பெருமக்களையும், ஆதீனப் பெரியோர்களையும், மடாதிபதிகளையும், இந்து இயக்கத் தலைவர்களையும் அழைத்து உரையாற்றச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.