பார்வையற்ற அக்காள்-தம்பி: அலைகழிக்கும் அதிகாரிகள்
ராமநாதபுரம்: உதவித் தொகை கேட்டு ஆண்டுக்கணக்கில் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர் பார்வையற்ற அக்காளும் தம்பியும்.
அவர்களுக்கு உதவ எந்த அதிகாரியும் முன் வரவில்லை.
தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த தம்பதிகள் முனியரசு, வாசுகி. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களது மகள் ரோஜா(15), மகன் ஈஸ்வரன் (12).
பிறவியில் இருந்தே கண் பார்வை அற்ற இவர்கள் ஊனமுற்றவர்களுக்கான அடையாள அட்டை பெற்றும் இருவருக்கும் எந்த அரசு உதவியும் இதுவரை கிடைக்கவில்லை.
பல ஆண்டுகளாக போராடியும் அங்குள்ள அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களது தாய் வாசுகி, கலெக்டரின் உதவியை நாட முடிவு செய்து நேற்று குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு செய்தார்.
அவர் கூறுகையில், இரு குழந்தைகளுக்கும் பிறவியில் இருந்தே பார்வையில்லை. கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் உதவி கேட்டு எங்கள் பகுதி அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் கண்டுகொள்ளவில்லை. இறுதிகட்டமாக கலெக்டரை நம்பி மனு அளிக்க வந்தேன் என்றார்.
மனவளர்ச்சி குன்றியோருக்கு உதவி:
இதற்கிடையே, இந் நிலையில் சமூக நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றியோருக்கு வருமான வரையறையின்றி ஊனமுற்றோருக்கான உதவித் தொகை வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதையாவது அதிகாரிகள் முறையாக அமல்படுத்தி அந்த இயலாத மக்களும் வாழ உதவ வேண்டும்.