சிக்னல் தவறால் பாதை மாறிப் போன மின் ரயில்!
சென்னை: தவறாக சிக்னல் கொடுக்கப்பட்டதால் மின்சார ரயில் பாதை மாறிப் போனது. இதனால் ரயில் கடத்தப்படுகிறதோ என்று பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
அரக்கோணத்தில் இருந்து நேற்று மதியம் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இது வியாசர்பாடி ரயில் நிலையத்தை விட்டு கடக்கும் போது, அங்கிருந்த ஊழியர்கள் தவறால் சிக்னல் மாற்றி கொடுக்கப்பட்டு விட்டது.
அதைத் தொடர்ந்து அந்த மின்சார ரயில் பீச் ரயில் நிலையம் செல்லும் பாதையில் சென்றது. இதனால், பயணிகள் பதறினார்கள். சில மாதங்களுக்கு முன்பு சென்டிரல் ரயில் நிலையத்தி்ல மின்சார ரயிலை ஒரு மர்ம நபர் கடத்திச் சென்று மோதிய சம்பவம் ஞாபகத்திற்கு வர பயணிகள் பெரும் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் ரயில் என்ஜினின் டிரைவருக்கு சந்தேகம் வந்து அவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ராயபுரம் வழியாக ரயிலை திருப்பி விட்டு பேசின்பிரிட்ஜ் வழியாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்து சேர்ந்தது.
இந்தக் குழப்பத்தால் மின்சார ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.