எனது சுயநலனுக்காக யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் - பொன்சேகா
வாஷிங்டன்: எனது சுய நலனுக்காக யாரையும் நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ஈழப் போரின்போது நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக, கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிரான ஆதாரங்களை வழங்குமாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பொன்சேகாவுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக வருகிற 4ம் தேதி விசாரணைக்கு வருமாறும் அழைத்துள்ளனர்.
இதனால் இலங்கையில் பலத்த பீதி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராஜபக்சே சகோதரர்கள் பெரும் டென்ஷனில் உள்ளனர். தங்களுக்கு எதிராக பொன்சேகா போட்டுக் கொடுத்து விடுவாரோ என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது.
ஆனால் தான் யாரையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் பொன்சேகா. இதன் மூலம், ராஜபக்சே சகோதரர்களுடன் சமரசமாகப் போக அவர் முடிவெடுத்திருப்பதாக உணரப்படுகிறது.
அமெரிக்காவில் தங்கியுள்ள பொன்சேகாவை, அமெரிக்காவிலுள்ள சிங்கள அமைப்பான ஹெல உறுமயவின் பிரமுகர்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்களிடம் பொன்சேகா பேசுகையில்,
நான் எனது தேவைகளுக்காக யாரையும் ஏமாற்றமாட்டேன். அதேவேளை நாட்டையும் விட்டுக் கொடுக்கமாட்டேன். எனது தனிப்பட்ட நன்மைகளுக்காக எவரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்றார்.
இதற்கிடையே, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டின் பேரில் அமெரிக்காவில் வாழும் ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் சரத் பொன்சேகாவை விசாரிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்சேகாவை விசாரிக்கக் கூடாது- இலங்கை:
இந் நிலையில் இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவை அமெரிக்க அதிகாரிகள் விசாரிக்கக் கூடாது. அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று அமெரிக்காவை இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய பொகல்லகாமா, பொன்சேகாவை விசாரிக்கும் முடிவிலிருந்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விலக வேண்டும். இந்த முடிவை கைவிட வேண்டும்.
நவம்பர் 4ம் தேதி பொன்சேகாவை நேர்காணலுக்காக (விசாரணை) அமெரிக்க அதிகாரிகள் அழைத்துள்ளனர். இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக இந்த நேர்காணலுக்கு பொன்சேகா அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எங்களது நிலையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் பாட்ரீசியா புடெனிஸ் மூலம் அமெரிக்க அரசுக்குத் தெரிவித்துள்ளோம் என்றார் பொகல்லகாமா.