என்.கே.கே.பி. ராஜாவின் துப்பாக்கி லைசென்ஸ் ரத்து
ஈரோடு: ஆள் கடத்தல், அடிதடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருக்கும் முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் துப்பாக்கி உரிமத்தை காவல்துறை ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில் ராஜா தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று ஈரோடு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
ராஜா மீது ஆள்கடத்தல், நிலம் அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பெருந்துறை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி வழக்கின் முக்கிய சாட்சியான சிவபாலனை தாக்கிய வழக்கையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ராஜா உள்பட 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதில் அவருடைய உதவியாளர் காஞ்சிக்குமார் மற்றும் அசோக்குமார், செந்தில், வேலு ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 30-ந்தேதி கைது செய்தனர். வீட்டுக் காவலாளிகளில் ஒருவரான காளியப்பனை நேற்று முன்தினம் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
ராஜா, அவருடைய 2வது மனைவி உமா மகேஸ்வரி, விஜயகுமார், கார் டிரைவர் சக்தி, இன்னொரு காவலாளி ஆகிய 5 பேரை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.
ராஜா மற்றும் அவரது 2வது மனைவியின் பாஸ்போர்ட்களை முடக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ராஜாவின் மீது இந்திய ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து உள்ளனர். போலீசாரின் பரிந்துரையை ஏற்று மாவட்ட கலெக்டர் சுடலை கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி என்.கே.கே.பி.ராஜாவின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்துள்ளார்.
இதற்கிடையே, ராஜா, உமா மகேஸ்வரி ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு இன்று ஈரோடு மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.