தமிழக மாலுமியை மீட்க சோமாலியா கடற் கொள்ளையர்களுடன் பேச்சு
தூத்துக்குடி: சோமாலியா கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இந்திய கப்பலை மீட்க இடைத் தரகர்கள் மூலம் கொள்ளையர்களுடன் கப்பல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மும்பையை சேர்ந்த அல்-காலித் என்ற சரக்கு கப்பல் கடந்த 21ம் தேதி இந்திய மாலுமிகள் உள்பட 24 பேருடன் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தபோது சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட 24 பேரில் தூத்துக்குடியை சேர்ந்த விஜய கணேசும் ஒருவர். கடந்த 14 நாட்களாக கடத்தப்பட்ட கப்பலில் இருந்து எவ்வித தகவலும் கிடைக்காததால் கப்பல் மாலுமிகளது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சோமாலியா கடற் கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ள கப்பலின் கேப்டன் ஸ்நேகல் மும்பையில் உள்ள கப்பல் நிறுவன இயக்குனருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது கப்பலில் மாலுமிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவு மற்று் தண்ணீர் இருப்பதாகவும், கடற் கொள்ளையர்கள் தங்களை துன்புறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை கப்பல் நிறுவனம் தங்களது குடும்பங்களுக்கு தெரிவித்துள்ளதுடன் இந்திய மாலுமிகள் 245 பேரையும் மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாலுமிகளை மீட்பதற்கான முயற்சியில் அகில இந்திய கப்பல மாலுமிகள் சங்கமும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இச்சங்கத்தின் உதவிச் செயலாளரான எல்.பி.விமல்சன் மும்பையிலிருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்து விஜய் கணேஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மாலுமிகளை மீட்கும் நடவடிக்கை குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கப்பலின் தொலை தொடர்புகளை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடந்த 10 நாட்களாக துண்டிதிருந்ததால் கப்பல் மாலுமிகள் நிலை குறித்து எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தது.
நேற்று முன்தினம் கப்பல் கேப்டன் நிறுவனத்துடன் பேசியுள்ளார். பிடியிலுள்ள மாலுமிகளை மீட்க இடைத்தரகர்கள் மூலம் அந்த கப்பல் நிறுவனம் கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவகாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.