அகதிகள் வந்த கப்பலில் விடுதலைப் புலிகள் - கூறுகிறது கனடா
வான்கூவர்: 76 இலங்கைத் தமிழர்களுடன் பிடிபட்டுள்ள கப்பலில் விடுதலைப் புலிகளும் இடம் பெற்றுள்ளனர். இவர்களை நாட்டுக்குள் அனுமதித்தால் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்படும் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ஓசன் லேடி என பெயரிடப்பட்ட கப்பல் ஒன்றை கனடா அதிகாரிகள் தடுத்துப் பிடித்தனர். அதில், 76 இலங்கைத் தமிழர்கள் இருந்தனர். அனைவரும் ஆண்கள் ஆவர்.
இந்த நிலையில், இந்தக் கப்பலில் இருப்பவர்கள் விடுதலைப் புலிகள் என கனடா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா குடியேற்றப் பிரிவு செய்தித் தொடர்பாளர் பாலா பேபர் கூறுகையில், இக்கப்பலில் உள்ளவர்களில் விடுதலைப் புலிகளும் உள்ளனர்.
அனேகமாக இந்தக் கப்பல் ஆயுத மாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். மேலும், இந்தக் கப்பலில் இருப்பவர்களை கனடாவில் அனுமதித்தால் பாதுகாகப்புப் பிரச்சினை ஏற்படலாம் என்றும் சந்தேகிக்கிறோம்.
இந்தக் கப்பலில் இருந்த இருவரின் உடைகளில் வெடிபொருட்களின் தடயங்கள் காணப்பட்டன என்றார்.
இதற்கிடையே கனடா நாட்டு குடியேற்றத் துறை அமைச்சர் ஜேசன் கென்னியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீவிரவாதம் அல்லது குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் இந்தக் கப்பலில் இருந்தால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றார்.