அடியோடு அழிந்துபோகும் ஆபத்தில் 17,000 வகை உயிரினங்கள்
இயற்கை மற்றும் உயிரினங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐயுசிஎன் நிறுவனம் இந்தாண்டு, உலகம் முழுவதுமுள்ள விலங்கினங்கள், தாவரங்கள் என மொத்தம் 47,677 உயிரின வகைகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டது.
இதில், 17,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள், இனி உலகில் இல்லாமலே போய்விடும் நிலை உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, பாலூட்டி இனத்தில் ஐந்தில் ஒரு பாகமும், ஊர்வன மற்றும் மிதப்பன இனத்தில் மூன்றில் ஒரு பாகமும், பாதிக்கும் மேற்பட்ட தாவர வம்சங்கள் முற்றாக அழிந்துபோகும் நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பிலிப்பைன்ஸ்சில் காணப்படும் பல்லி இனத்தைச் சேர்ந்த 'பனாய் மானிட்டர் லிஸார்ட்', 'செயில் பின் வாட்டர் லிஸார்ட்' ஆகியவை உணவுக்காக அதிகளவில் வேட்டையாடப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் மனித குலத்தின் தேவைக்காக வனப் பகுதிகள் சுருங்கி வாழ்விடங்கள் காணாமல் போய் வருவதால் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள விலங்குகளும் தாவரங்களும் முற்றிலும் அழியும் சூழல் உருவாகியுள்ளதாக இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.