பெங்களூர்: ஐடி ஊழியர்களில் 93% பேர் மகிழ்ச்சியாக இல்லை!
ஹெல்த்டிராக் என்ற நிறுவனத்திற்காக பீப்பிள்ஹெல்த் என்ற ஆரோக்கிய நிர்வாக நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஏழு முன்னணி ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த 2106 ஊழியர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இவர்களில் 85 சதவீதம் பேர் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட இவர்கள், ஒத்துழைப்பு தராத சக பணியாளர்கள் அல்லது நிறுவன நிர்வாகிகளுடன் பணியாற்றுவது பெரும் சலிப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது, ஊதிய உயர்வு இல்லாதது உள்ளிட்டவற்றாலும் ஊழியர்களில் பெரும்பாலோனோர் கவலையுடன் உள்ளனராம்.
இந்த ஆய்வுக்காக ஊழியர்களை மருத்துவ ரீதியிலும், மனோதத்துவ ரீதியிலும் பரிசீலித்துள்ளனர். ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய சோதனைகள், நீரிழிவு பிரச்சினைகள் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
தூங்கும் நேரம், அலுவலகத்திலிருந்து வீட்டுக்கும், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும் பயணிக்கும் தூரம் ஆகியவற்றையும் கணக்கிட்டுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 93 சதவீதம் பேர் பொதுவான சோகத்தில் உள்ளனர். 6 சதவீதம் பேர் மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேர பணி, தாறுமாறான வேலை நேரம், டிராபிக் ஜாம் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், இதனால் அலுவலகம் சென்று வர ஆகும் நீண்ட நேரம், சமூகத்துடன் கலந்து போகும் போக்குக்கு நேரம் கிடைக்காமை ஆகியவைதான் பெரும்பாலோனோரின் பெரும் கவலையாக உள்ளதாக பீப்பிள் ஹெல்த் நிறுவன தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.