ஆக்கிரமிப்பு-'டிராபிக்' ராமசாமிக்கு கொலை மிரட்டல்
சென்னை: சென்னை தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த விநாயகர் கோவிலை போலீஸார் அகற்றினர். இதையடுத்து இதற்குக் காரணமாக இருந்ததற்காக சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாண்டிபஜார் தென் மேற்கு போக்ரோட்டில் புதிதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டது. 8-க்கு 8 அகலத்தில் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு அதன் மீது சுமார் 12 அடி உயர கோபுரமும் கட்டப்பட்டது. கோவில் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிசேகமும் செய்ய வேலைகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் அந்த கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து அந்தக் கோவிலை இடித்துத் தள்ள மாநகராட்சிக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் கோவிலை இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கூடி விட்டனர். இருப்பினும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் இடித்துத் தள்ளப்பட்டது.
கோவில் இடிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த சிலர் டிராபிக் ராமசாமி வீட்டை முற்றுகையிட்டனர். சிலர் அவரை அடிக்கவும் முற்பட்டனர். அவரைக் கொன்று விடுவதாகவும் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.
தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தற்போது மாம்பலம் போலீஸில் டிராபிக் ராமசாமி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.