5 பிரிட்டிஷ் வீரர்களை சுட்டு கொன்ற ஆப்கான் போலீஸ் அதிகாரி
ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் படைகளின் முகாமுக்குள் நுழைந்த அவர் இங்கிலாந்து வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் பிரிட்டஷ் ராணுவத்தின் போலீஸ் பிரிவைச் சேர்ந்த 5 பேர் பலியாயினர்.
மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். பலத்த பாதுகாப்பு மிக்க இந்த முகாமுக்குள் போலீஸ் அதிகாரி என்பதால் துப்பாக்கியுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அவர் ஆப்கானி்ஸ்தான் தேசிய போலீஸ் படையில் 3 ஆண்டுகளாக பணியில் இருப்பவர் என்று தெரிய வந்துள்ளது. இந்த போலீஸ் படையை அமெரிக்காவும் பிரிட்டனும் உருவாக்கி அதன் காவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வரும் நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதல் நடத்திய அந்த நபரை அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டுப் படைகள் தேடி வரும் நிலையில் இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கான் காவல்துறையிலும் தலிபான் ஊடுருவிவிட்டது அமெரிக்கா-பிரிட்டிஷ் படைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலையடு்த்து அமெரி்க்க-பிரிட்டிஷ் படையினரின் முகாம்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டுள்ளது. ஆப்கான் போலீசாரையே அவர்கள் சந்தேதத்துடன் பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஐ.நா. விடுதி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 5 ஊழியர்கள் பலியானதையடுத்து ஆப்கானி்ஸ்தானி்ல் இருந்து 600 ஊழியர்களை ஐ.நா. திரும்பப் பெற்றுள்ளது.