லாபத்தில் இயங்கும் அரசு நிறுவனப் பங்குகளை விற்க அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: நிதி நெருக்கடியைச் சமாளிக்க லாபத்தில் இயங்கும் அனைத்து அரசுத் துறை நிறுவனங்களிலும் 10 சதவிகிதத்தை விற்பனை செய்வதற்கான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பழைய, புதிய பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தின் பங்குகளுமே இந்த வகையில் தனியாருக்கு விற்கப்படும். இந்தத் தகவலை, காபினெட் கூட்டத்துக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார்.
இன்றைய பொருளாதாரச் சூழலில் குறைந்தது அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்த வகை நிதி திரட்டல் நிதித் துறைக்கு தேவைப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த முதலீட்டு விலக்கல் திட்டப்படி கிடைக்கும் நிதி தேசிய முதலீட்டு நிதியில் சேர்க்கப்படும். இந்தக் கணக்கில் இப்போதைய இருப்பு ரூ.1184 கோடிகள். நேஷனல் பவர் கிரிட் நிறுவனத்தின் பங்குகளை விற்ற வகையில் கிடைத்ததுதான் இந்தத் தொகை.
கடந்த ஏப்ரல் 2009 முதல் வரும் 2012 வரை இந்த நிதியில் சேர்க்கப்படும் தொகையைக் கொண்டு, நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழுமையான நிதி உதவி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சரவையின் இந்த ஒப்புதலுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய அங்கத்தினருமான மம்தா பானர்ஜி.
மத்திய அரசு ஏற்கெனவே, மாருதி உத்யோக் லிமிடட், என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ரூரல் எலெக்ட்ரிபிகேஸன் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களில் இருந்த தனது பங்குகள் அளவை கணிசமாக விற்றுவிட்டது
ஆயில் இந்தியா, என்எச்பிசி நிறுவனங்களின் பங்குகளையும் விற்கத் துவங்கிவிட்டது. இப்போது என்டிபிசி, சட்லெஜ் ஜல் வித்யூத் நிகாம் போன்ற நிறுவனங்களில் மேலும் தனது பங்கின் அளவைக் குறைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.