நாளை மகாராஷ்டிர அரசு பதவியேற்கிறது
மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நாளை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அமைச்சர் பதவிகளை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சினை நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அசோக் சவான் தலைமையிலான அரசு பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என தற்போது கூறப்படுகிறது. நேற்று பிற்பகலில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில தலைமைச் செயலகம் தொடங்கியிருந்தது. ஆனால் மாலையில் பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் மூலம் இன்று பதவியேற்பு விழா நடைபெறாது என்பது தெளிவானது.
இன்று வேண்டாம், வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் பதவியேற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம என ஜோதிடர்கள் அறிவுறுத்தியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாம் காங்கிரஸ் தரப்பு.
'டீல்' என்ன...?
1999ம் ஆண்டு இரு கட்சிகளும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின்படியே தற்போது காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் அமைச்சர் பதவி பங்கீட்டை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் பொறுப்பாளரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி கூறுகையில், தேசியவாத காங்கிரஸுடன் அனைத்துப் பேச்சையும் முடித்து விட்டோம். எங்களது பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி விட்டன என்றார்.
1999ம் ஆண்டு காங்கிரஸுக்கு 23, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 20 இடங்கள் என தீர்மானிக்கப்பட்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. தற்போதும் அதேபோலவே அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
சோனியாவுடன் சவான் சந்திப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அமைச்சரவை அமைப்பு, இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் சோனியாவுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது ஏ.கே.அந்தோணி, அகமது படேல் ஆகியோரும் உடன் இருந்தனர்.