கோர்ட்டில் ஆஜராக சென்றவர்கள் மீது சரமாரி குண்டு வீச்சு
செய்யாறு: செய்யாறு கோர்ட்டில் ஆஜராவதற்காக சென்றவர்கள் மீது நாட்டு வெடிகு்ண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரத்தை அடுத்த பூஞ்சை அரசங்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். ரியல்எஸ்டேட் அதிபர். இவர் மீது செய்யாறு தாலுக்கா தூசி காவல் நிலையத்தில் 2000 -ம் ஆண்டில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கில் செய்யாறு கோர்ட்டில் ஆஜராவதற்காக வேனில் சென்றார்.
அவருடன் சகோதரர்கள் பெருமாள், முருகேசன், மாமா குமார் மற்றும் உதயகுமார், பஞ்சாட்சரம், கணேசன், பாபு, செல்வம், குமார் ஆகியோரும் சென்றனர்.
செய்யாறு- காஞ்சீபுரம் சாலையில் உள்ள சோழவரம் கூட்டு ரோட்டில் வேன் சென்று கொண்டு இருந்தது. அப்போது வேகமாக வந்த கார் வேனை வழிமறித்தது. அதில் 6 பேர் இருந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் 4 நாட்டு வெடிகுண்டுகளை வேனுக்குள் வீசினார்கள்.
இதனால் வேனுக்குள் புகை மண்டலமானது. உடனே அந்தகும்பல் அரிவாள் களுடன் வேனுக்குள் புகுந்து கிருஷ்ணன், அவரது உறவினர்களை வெட்டியது. தலை, கை, கால்களில் வெட்டுப்பட்ட அவர்கள் அலறினார்கள். அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால் அவர்களது அலறல் யாருக்கும் கேட்கவில்லை.
இதை சாதகமாக்கி கொண்ட அக்கும்பல் அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றது.
படுகாயம் அடைந்த கிருஷ்ணன் செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.
காயமடைந்து கிடந்த கிருஷ்ணன், பஞ்சாட்சரம், குமார், பாபு, பெருமாள், முருகேசன், குமார், டிரைவர் நேதாஜி உள்பட 9 பேரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாக்குதல் நடத்தியக் கும்பலைப் பிடிக்க தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டது. செய்யாறு டவுன் புளியரம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் குற்றவாளிகளின் கார் நின்று கொண்டிருந்தது. காரை நிறுத்தி விட்டு அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.
முன் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.