2012-13ல் சந்திராயன்-2 திட்டம் தயாராகும் - அண்ணாதுரை
பெங்களூர்: சந்திரனின் நிலப்பகுதி மற்றும் கனிம வளங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு உதவிடும் சந்திரயான்-2 திட்டம், 2012-13 ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் என்று சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மாணவர் மாநாட்டை துவக்கிவைத்து பேசுகையில் அண்ணாதுரை இத்தகவலை தெரிவித்தார்.
அவர் பேசுகையில்,சந்திரயான்-2 திட்டத்தின் கீழ் இரண்டு 'மூன் ரோவர்'கள் விண்கலம் மூலம் சந்திரனுக்கு அனுப்பப்படும். இவையிரண்டும் நிலவின் பிரதேசத்தில் உருண்டோடிக்கொண்டே, நிலவுப் பிரதேசத்தில் உள்ள பாறைகள் அல்லது மணல் மாதிரிகளை சேகரித்து, வேதியியல் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இந்த ஆய்வு தகவல்கள் உடனுக்குடனாக நிலவை சுற்றிவரும் விண்கலத்துக்கு அனுப்பப்படும். நிலவை சுற்றிவந்து ஆய்வு நடத்திய சந்திராயன்-1ஐ போல் அல்லாமல், சந்திராயன்-2 நிலவுப் பிரதேசத்திலேயே ஆய்வு செய்யும். சந்திராயன்-2 திட்டத்துக்கு ஆகும் செலவு ரூ.425 கோடி என்றார் அண்ணாதுரை.