அருணாச்சல் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதில் நியாயமில்லை - தலாய் லாமா
நான்கு நாள் பயணமாக இன்று தவாங் வந்தார் தலாய் லாமா. இவரது பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், பரபரப்பு நிலவியது. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குவஹாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தவாங் வந்தடைந்தார் தலாய் லாமா. அவருடன் அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி கந்துவும் உடன் வந்தார்.
அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த தவாங் மத தலைமை பீடத்திற்கு தலாய் லாமா சென்றார்.
வழியில் பழைய மார்க்கெட், மஞ்சுஸ்ரீ வித்யாபீடம், புதிய மார்க்கெட் ஆகிய இடங்களில் தலாய் லாமாவின் கார் நிறுத்தப்பட்டு மக்களை அவர் ஆசிர்வதித்தார்.
தலாய் லாமாவின் வருகையையொட்டி தவாங் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. நான்கு நாட்கள் இங்கு தங்குகிறார் தலாய் லாமா.
தவாங் புத்த மத பீடத்தில் அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்தார் தலாய் லாமா. பின்னர் கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் பிரிவினைவாத இயக்கத்தை நடத்துவதாக சீனா கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அருணாச்சல் பிரதேசத்திற்கு நான் வந்திருப்பது அரசியல் சார்பற்ற ஒரு பயணம்.
நான் எங்கு போனாலும் எனக்கு எதிராக பிரசாரத்தைத் தூண்டி விடுவது சீனாவின் வழக்குமாகும்.
உலகளாவிய சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். வேறு எதற்காகவும் நான் வரவில்லை.
தவாங் நகருக்கும், எனக்கும் உணர்வுப்பூர்வமான பந்தம் உள்ளது. எனவே இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
நான் 1959ம் ஆண்டு சீனாவிலிருந்து தப்பியபோது, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமாக இருந்தேன். எனக்கு அப்போது வயிற்றுப்போக்கும் இருந்தது.
நான் இந்தியாவுக்கு தப்பி வந்த பின்னர் எனக்கு எதிராகப் பேசத் தொடங்கியது சீனா. அவர்களின் பேச்சுக்கள் எனக்கு இன்னும் கூட வியப்பாகவே உள்ளன.
திபெத்திய புத்தமதமும், கலாச்சாரமும் மிகவும் கடினமான கால கட்டத்தில் உள்ளன. ஆனால் இந்தியாவில் மதம் மீதான நம்பிக்கையும், கலாச்சாரமும் தொய்வின்றி உறுதியாக உள்ளன.
எனவே இங்கு வசிக்கும் திபெத்தியர்களும், தென்னிந்தியாவில் வசிக்கும் திபெத்திய மக்களும் நமது கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
தலாய் லாமாவின் பயணத் திட்டம்...
தலாய் லாமா நாளை இங்குள்ள பள்ளி மைதானத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர் 12ம் தேதி போம்டில்லா மற்றும் திரங் ஆகிய நகர்களுக்குச் செல்கிறார். நவம்பர் 14ம் தேதி இடா நகர் செல்கிறார். 15ம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.