கருணாநிதியின் மகனாக பிறந்ததே பெருமை-ஸ்டாலின்
அரூரில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் அண்ணா சிலை திறப்பு விழா நடந்தது.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புகழ் பெற்ற தலைவர் கருணாநிதியின் மகனாக பிறந்ததே எனக்கு பெருமையளிப்பதாக உள்ளது. அமைச்சர், துணை முதல்வர் மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை நான் வகித்த போதும், உங்களோடு, உங்களில் ஒருவனாக இருந்து கடமையாற்றுவதே எனக்கு மகிழ்ச்சி.
தமிழகத்தில் அண்ணா பிறந்து இருக்காவிட்டால், நாம் நம் உணர்வுகளை இன்று பேசியிருக்க முடியாது. தன்மானத்தோடு சாலைகளில் நடக்க முடியாது.
அண்ணா பதவிக்கு வருவதற்காக, திமுக - வை துவக்கவில்லை. மக்களுக்காக துவங்கினார். இன்றைக்கு பல கட்சிகளில் இருந்து பலர் திமுக-வில் வந்து இணைகின்றனர். அதற்கு காரணம் அண்ணா வழியில் மாற்று கட்சியினரை மதிக்க தெரிந்தவர்கள் திமுக-வினர் என்பது மட்டும் அல்ல, மக்கள் மத்தியில் திமுக-வுக்கு நல்ல மதிப்பு கிடைத்துள்ளதே காரணம்.
முதல்வர் கருணாநிதி 86 வயதிலும் தனது உடல் நல பிரச்னைகளை கூட பார்க்காமல் மக்களுக்காக உழைத்து வருகிறார் என்று ஸ்டாலின் பேசினார்.