தமிழக-கேரள எல்லையில் தொடர் மழை- 400 குடும்பங்கள் தத்தளிப்பு
தென்மலை: தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் சாலை வசதி துண்டிக்கப்பட்டு 400 குடும்பங்கள் தவித்து வருகின்றன.
தமிழக-கேரள எல்லை செங்கோட்டை அருகேயுள்ள ஆரியங்காவு, ரோஸ்மலை, தென்மலை, கழுதுருட்டி, முருகன்பாஞ்சால், அஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இப்பகுதிகளில் ரப்பர், தேயிலை, தோட்டங்கள் உள்ளன. இங்கு தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இப்பகுதியில் வசிப்பவர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் பொருட்கள் வாங்க ஊருக்குள் வரமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆரியங்காவு ரோஸ்மலை, இடப்பாளையம், கரும்பின் தோட்டம், கரையாளர்பத்து உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தினால் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் ஆரியங்காவிலிருந்து ரோஸ்மலை 5 கிமீ தொலைவில் உள்ளது. மிகவும் ஆபத்தான இப்பாதையில் சுமார் 7 கிமீ சாலை முற்றிலும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. நேற்று அப்பகுதியில் 15 செமீ மழை பெய்துள்ளது.
இம்மழையினால் 7 கிமீ சாலைகள் துண்டிக்கப்பட்டு 400 குடும்பங்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 10 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
400 குடும்பத்தினர் ரோஸ் மலை பகுதியில் பாதை இல்லாத வனப்பகுதியில் சிக்கியுள்ளது குறித்து தகவல் அறிந்து அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு உணவு வழங்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 1992ம் ஆண்டு ஏற்பட்ட சேதம் போல் இம்முறையும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதிகரித்து வரும் கட்டாற்று வெள்ளத்தால் தென்மலை நீர்த்தேக்கம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மலை கடையாற்றில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரையோரத்தில் இருக்கும் மக்கள் வேறு இடங்களில் குடியிருக்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.