சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற பெண்கள்- சுற்றி வளைத்த போலீஸ்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள சமூக நலத்துறை அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டதில் ரூ.14,500 லஞ்சப் பணம் சிக்கியது.
சமூக நலத்துறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஏழை, இளம் பெண்களின் திருமணத்துக்காக ரூ. 20,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேறு சில திட்டங்களிலும் சமூக நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஆனால், இந்தத் தொகைக்கான காசோலையை வழங்க ஒவ்வொரு பயனாளியிடமும் தலா 300 முதல் 500 ரூபாய் வரை இந்தத் துறை ஊழியர்கள் கட்டாய லஞ்சம் பெறுவது வழக்கம்.
இது குறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்ததையடுத்து டி.எஸ்.பி. ரெங்கராஜன், இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டுகள் கந்தப்பன், ராஜமாணிக்கம், செல்வம் ஆகியோர் தஞ்சாவூர் சமூக நலத்துறை அலுவலக வளாகத்தில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த கிராம செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், பாபநாசம் பகுதி கிராம செவிலியர் வெண்ணிலாவிடம் 3,500 ரூபாய், விஜயாவிடம் 800 ரூபாய், அல்போன்சாவிடம் 400 ரூபாய், சேதுபாவாசத்திரம் பகுதி கிராம செவிலியர் வாசுகியிடம் 5,300 ரூபாய், சரோஜாவிடம் 500 ரூபாய் என 14 ஆயிரத்து 500 ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.
இந்தத் தொகைக்கு முறையான கணக்குகள் அவர்களிடம் இல்லை. எனவே இது லஞ்சப் பணம் என்பது உறுதியானது.
இது குறித்து அவர்கள் ஐந்து பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.