காவல் நிலையத்தில் வழக்கு பைல்கள் மாயம்: 15 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலையத்தில் வழக்குகள் சம்பந்தப்பட்ட 67 பைல்களைக் காணவில்லை. இது தொடர்பாக 3 இன்ஸ்பெக்டர்கள், 12 எஸ்ஐகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்தில் பல்வேறு கால கட்டங்களில் பதிவாகியுள்ள சுமார் 67 வழக்குகளின் பைல்கள் திடீரென காணவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அந்த கால கட்டங்களில் அங்கு பணிபுரிந்த மூன்று இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 எஸ்ஐகள் மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அதில், இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேந்தன், செல்லமுத்து, சேகர், எஸ்.ஐ.,க்கள் சுந்தரராஜன், ஆறுமுகம், முருகேசன், பன்னீர்செல்வம், தங்கராஜ், பெரியசாமி, ஆனந்தகுமார், சிவகுமார், ஸ்ரீதரன், விஜயா, நாகமணி, நடராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தகவல் மற்ற காவல் நிலைய அதிகாரிகளுக்கும் பரவியதால் ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த காவல் நிலையத்தில் தான் நில அபகரிப்பு மோசடி புகழ் என்.கே.கே.பி,.ராஜா சம்பந்தப்பட்ட வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.