கேரளாவுக்கு கல்பொடி கொண்டு செல்ல தடை - எல்லையில் 80 லாரிகள் நிறுத்தம்
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்ததை தொடர்ந்து அம்மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஹாரிப்பாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வந்த பணிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன.
கேரளாவில் மணல் அள்ள தொடர்ந்து தடை இருந்து வரும் நிலையில் மணல் பிரச்சனை அங்கு பூதகரமானது. இதைத் தொடர்ந்து அம்மாநில அரசு மலப்புலா, தென்மலை உள்ளிட்ட பல்வேறு நீர்த்தேக்கங்களில் குவிந்து கிடக்கும் மணலை அப்புற்படுத்தவும், நீர்த்தேக்கங்களை ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை கட்டி முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அம்மாவட்ட மக்கள் தமிழகத்திலிருந்து கல்பொடியை (கிரஷ்ஸர் பொடி) தமிழகத்திலிருந்து வாங்கி வீட்டு பணிகளை நிறைவு செய்ய தொடங்கினர்.
இந்நிலையில் சில கிரிமினல் கொள்ளையர்கள் மணல் மற்றும் கல்பொடி கலந்து கேரளாவுக்கு நாகர்கோவில் வழியாக கடத்தப்பட்டது தெரிய வந்ததால் இந்த கல் பொடி லாரிகளை காவல் துறையினர் முடக்க ஆரம்பித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள ஏராளமான கல் குவாரிகளில் இருந்து புளியரை வழியாக கல் பொடியை ஏற்றிச் சென்ற லாரிகளை கடந்த 7ம் தேதி முதல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இதனால் சுமார் 80க்கும் மேற்பட்ட லாரிகள் கல் பொடியோடு திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்து கிடக்கின்றன.
கடந்த 4 நாட்களாக தமிழக-கேரள எல்லையில் அணிவகுத்து நிற்கும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.