யுஎஸ் தீவிரவாதி... பல்டி அடித்த ப.சிதம்பரம்!
ஹெட்லியை விசாரிப்பதற்காக ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது. அவரை விசாரிக்கவே இந்தக் குழு செல்வதாக கடந்த வாரம் ப.சிதம்பரமும் கூறியிருந்தார்.
ஆனால், ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி தரவில்லை. இதையடுத்து ஒரு வாரமாக அமெரிக்காவில் டூர் அடித்துவிட்டு இந்திய உளவுக் குழு ஊர் திரும்பி வந்துவிட்டது.
இந் நிலையில் நிருபர்களை சந்தித்த சிதம்பரத்திடம், இந்தியக் குழுவால் ஏன் ஹெட்லி விசாரிக்க முடியவில்லை என்று கேட்டதற்கு,
அவரை விசாரிப்பதற்காக இந்தியக் குழு சென்றதாகக் கூறுவது தவறு. உங்கள் (நிருபர்கள்) அஜெண்டாவோடு அவர்கள் அங்கு செல்லவில்லை. அவர்கள் அவர்களது வேலைக்காகப் போனார்கள் என்று ஒரே போடாகப் போட்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கடந்த ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முன் பலமுறை ஹெட்லி இந்தியா வந்து சென்றுள்ளார். ஆனால், அவருக்கும் மும்பை தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை. அது குறித்து விசாரிப்போம் என்றார்.
இதற்கிடையே இந்திய உளவுப் பிரிவினருக்கு எப்பிஐ அனுப்பி வைத்துள்ள விவர அறிக்கையில்,
2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஹெட்லி 9 முறை இந்தியாவுக்கு பிஸினஸ் விசாவில் வந்து சென்றுள்ளார். மும்பையில் ஒரு விசா ஏஜென்சியையும் நடத்தி வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர் மற்றும் பிஸினஸ் விசாவில் வந்தவர் என்பதால் ஒருமுறை கூட இந்திய குடியேற்றத்துறையிடம் அவர் தன்னை பதிவு செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் என்றால் இந்திய விதிகளில் தாராளம் காட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஹெட்லியும் கனடாவைச் சேர்ந்த தவார் உசேன் ராணாவும் இணைந்து, டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி, டேராடூனில் உள்ள டூன் ஸ்கூல், முசோரியில் உள்ள உட்ஸ்டாக் பள்ளி ஆகியவற்றைத் தாக்கி தகர்க்கத் திட்டமிட்டிருந்த நிலையில் தான் எப்.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.