'விக்ரமாதித்தன் கதையும் ராகுல் காந்தியும்'!
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது முடிவில்லாத 'விக்ரமாதித்தன் கதை' போல ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. இந்த கதைக்கு ஒரு புதிய திருப்பம் வந்திருக்கிறது. அதுதான் ராகுல் காந்தி என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
தமிழக காங்கிரஸ் சிறப்பு உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் சத்தியமூர்த்தி பவனில் தொடங்கப்பட்டது. அதில் இளங்கோவன் பேசுகையி்ல்,
தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்குப் பிறகு, 42 வருடமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது முடிவில்லாத விக்ரமாதித்தன் கதை போல ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. இந்த கதைக்கு ஒரு புதிய திருப்பம் வந்திருக்கிறது. அதுதான் ராகுல் காந்தி.
பொதுவாக காங்கிரஸ் கட்சிக்கு யாராவது புதிதாக வந்துவிட்டால் முகத்தை சுளிப்போம். அப்படி இருந்தும்கூட 15 லட்சம் புதிய இளைஞர்கள் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக வந்திருக்கிறார்கள். அவர்கள் ரூ.15 உறுப்பினர் கட்டணம் செலுத்தி வந்திருக்கிறார்கள்.
நமக்கு கட்டணம் ரூ.3 தான். அப்படியென்றால், ஜாம்பவான்களான நாம் அதைவிட 5 மடங்கு அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இல்லையென்றால் இளைஞர்களுக்கு வழிவிட்டு நாம் ஒதுங்கிச் செல்வது தான் சரி.
நாம் யாருக்காக புதிய உறுப்பினர்களை சேர்க்கிறோம், தனிப்பட்ட நமக்காக அல்ல. தமிழர்களை நல்வழிப்படுத்திட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான்.
தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள கட்சி காங்கிரசாக இருக்க வேண்டும். ஒரு சிலர் 3, 4 கட்சிகளின் அடையாள அட்டை வைத்திருப்பார்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சி அட்டையை பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
அதுபோல் இல்லாமல், நம்மை நாமே ஏமாற்றும் வேலையைச் செய்யாமல் உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.