1962 போரை சொல்லி இந்தியாவுக்கு சீனா மிரட்டல்!
அருணாசலப் பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றதை கண்டித்த சீனா இப்போது அங்கு தலாய் லாமா சுற்றுப் பயணம் செய்வதையும் வன்மையாக கண்டித்துள்ளது.
அந் நாட்டு அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியில் சர்வதேச உறவுகளுக்கான சீன கல்வி மையத்தின் ஆய்வாளர் ஹூ ஷிசெங் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில்,
நமது நாட்டின் தெற்கு திபெத் பகுதிக்குள் (அருணாசலப் பிரதேசத்தைத் தான் இவ்வாறு சீனா குறிப்பிடுகிறது) தலாய் லாமா நுழைந்துள்ளது.
இந்த விவகாரம் (அருணாச்சல் யாருக்கு என்ற பிரச்சனை) முக்கிய கட்டத்தில் இருக்கும்போது இந்தப் பகுதிக்குள் தலாய் லாமாவை இந்திய அரசு தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறது.
இதன்மூலம் தனக்கு அடைக்கலம் தந்துள்ள நாட்டை மகிழ்ப்படுத்த தலாய் லாமா முயன்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல சீன அரசி்ன் இன்னொரு பத்திரிக்கையான குளோபல் டைம்சில் ஹூ ஷிசெங் எழுதியுள்ள கட்டுரையில்,
1962ம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு சீனா புகட்டிய பாடத்தை அந்த நாடு மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அப்போதும் இதே போலத்தான் நம்மை தேவையில்லாமல் சீண்டிவிட்டது இந்தியா. இதனால் தான் நாம் ராணுவ தாக்குதல் நடத்தினோம். மீண்டும் அதே வழியில் இந்தியா போய்க் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமாகும்போது அதை இந்தியா எப்படி உருவாக்கியதோ அதே வழியில் சீனா சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா மறுப்பு:
இந் நிலையில் சீனாவின் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூர் கூறுகையில்,
மதத் தலைவர்களி்ன் பயணத் திட்டத்தை மத்திய அரசு தீர்மானிப்பதில்லை. தலாய் லாமா இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல உரிமை உண்டு. அவரது மக்களை அவர் சந்தி்க்கச் சென்றுள்ளார். அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்றது கூட அவரது தனிப்பட்ட பயணம் தான். அவரே எடுத்த முடிவு தான்.
அதே நேரத்தில் 1962ம் ஆண்டு போரை சுட்டிக் காட்டி மிரட்டுவது கீழ்த்தரமானது. அப்போது இருந்த நிலை வேறு. இப்போது இந்தியா எங்கோ வந்துவிட்டது. இனி சீனா மாத்திரமல்ல, இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது என்றார்.
லாமாவும் மறுப்பு:
இந் நிலையில் தவாங் நகரில் மக்களிடையே பேசிய தலாய் லாமா, நான் இந்தியா சொல்லித்தான் இங்கு வந்ததாகக் கூறுவது தவறு. இது அரசியல் பயணம் இல்லை. என் பயணத்தால் இந்திய-சீனா உறவு பாதிக்கப்படும் என்று சொல்வதும் மிரட்டுவதும் தவறு என்றார்.
என்ன தான் பிரச்சனை?:
இந்தியாவை ஆண்ட பிரிட்டனும் திபெத்தை ஆண்ட அரச பரம்பரையும் 1914ம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே எல்லையை வரையறுத்தன (அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது இந்த எல்லை).
McMahon Line எனப்படும் இந்த எல்லையை சீனா ஏற்கவே இல்லை. திபெத்தை தனது நாட்டுப் பகுதி என்று சொல்லி ஆக்கிரமி்த்த சீனா, 1962ம் ஆண்டில் அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பரப்பும் (கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அருணாசலப் பிரதேசமும்) தனது பகுதி என்று உரிமை கோரிக் கொண்டு இந்தியா மீது போர் தொடுத்தது.
அந்தப் போரில் இந்தியாவுக்கு படுதோல்வி ஏற்பட்டது. இந்தத் தோல்விக்கு அப்போதைய பிரதமர் நேரு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனின் மிகத் தவறான அணுகுமுறையே காரணமாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.