அதிமுக பதவிகளுக்கு 5 கட்டமாக தேர்தல்-ஜெ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக சட்டதிட்ட விதிப்படி, கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இதற்கேற்ப அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் 10.9.08 அன்று நடந்து முடிந்தது.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக அதிமுக நிர்வாகிகள், ஊராட்சி அதிமுக செயலாளர்கள், நகர, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சிக்கு உட்பட்ட வட்ட நிர்வாகிகள், வட்டபாக செயலாளர் ஆகியோருக்கான தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
3வது கட்டமாக ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் நடக்கிறது. 4வது கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கும்.
5வது கட்டமாக புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மராட்டியம், புதுடெல்லி, அந்தமான் மாநிலங்களைச் சேர்ந்த கிளை, வார்டு, வட்டம், தொகுதி, பகுதி, நகரம், மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும்.
முதல் கட்டமாக ஊராட்சி அதிமுக செயலாளர்கள், வார்டு, வட்ட கழக நிர்வாகிகள், வட்டபாக செயலாளர்களுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கும்.
இது, வடசென்னை, தென்சென்னை, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மேற்கு, திருவள்ளூர், விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மேற்கு, நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், கரூர், மதுரை மாநகர், மதுரைபுறநகர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும்.
27ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர், கோவை மாநகர், கோவை புறநகர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை மாநகர், நெல்லை புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கும்.
மூன்றாம் கட்டமாக அதிமுகஅமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் உட்பட்ட ஒன்றிய, நகர பேரூராட்சி பகுதி கழக நிர்வாகிகள் பொறுப்புக்கான தேர்தல் 2.12.09 முதல் 6.12.09 வரை நடக்கும். 4-வது கட்டமாக அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 7.12.09 முதல் 11.12.09 வரை நடக்கும்.
5வது கட்டத் தேர்தல் 14.12.09 முதல் 16.12.09 வரை வெளி மாநில அதிமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். மாவட்டவாரியாக அதிமுக அமைப்பு தேர்தல்களை நடத்தும் வகையில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுடைய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சி தொண்டர்கள், அதிமுக சட்டதிட்ட விதிப்படி அமைப்பு தேர்தல்கள் சுலபமாக நடைபெறும் வகையில், சம்பந்தப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், ஆணையர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.