பாக்.குக்கு சீனா அதிநவீன போர் விமானங்கள்
பெய்ஜிங்: சீனாவுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வரவுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு அதி நவீன போர் விமானங்களை வழங்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது.
1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அதி நவீன போர் விமானங்களை ஒபாமாவின் வருகைக்கு முன்பாக அளிக்க சீனா ஆர்வமாக உள்ளதாம்.
நவம்பர் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஷாங்காய், பெய்ஜிங் நகரங்களில் பயணம் செய்யவுள்ளார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
ஒபாமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எரிச்சலைத் தரும் வகையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீனா என்று கருதப்படுகிறது.
ஒபாமா தனது பயணத்தின்போது சீனா - இந்தியா உறவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் சீனத் தலைவர்களுடன் பேசுவார் என்று தெரிகிறது.
பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்க சீனா கடுமையாக போராடி வருகிறது. பாகிஸ்தானை நாமே வலுப்படுத்தினால் இந்தியாவுடன் பாகிஸ்தானை மோத விடுவது சுலபமாக இருக்கும் என்பது சீனாவின் கணக்கு.
சீனாவின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில்தான் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அளவிலான நிதியுதவியை அமெரிக்கா அறிவித்தது.
தற்போது இதையும் மிஞ்சும் வகையில் பாகிஸ்தானுக்கு அதி நவீன போர் விமானங்களைத் தர சீனா முன்வந்துள்ளது.
முதலில் 2 ஸ்குவாட்ரன் அதி நவீன போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா அளிக்கவுள்ளதாம்.
மேலும், முக்கிய தொழில்நுட்ப தகவல்களையும் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள சீனா ஆர்வமாக உள்ளதாம். தற்போது இந்த தொழில்நுட்பங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா மறுத்து வருவது குறிப்பிடத்தக்து.
தற்போதைய ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்கு சீனா ஜே-10 ரக போர் விமானங்களை வழங்குகிறது. 2 ஸ்குவாட்ரன் மட்டுமே தருவதாக சீனா கூறியள்ள போதிலும் அதிக அளவில் தருமாறு பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறதாம்.
பாகிஸ்தான் - சீன உறவில் இந்த போர் வி்மான ஒப்பந்தம் மிகப் பெரிய மைல் கல் என்று பாகிஸ்தான் கூறுகிறது.