யுஸ் தீவிரவாதி-இந்தியா விரையும் எப்பிஐ குழு
வாஷிங்டன்: அமெரி்க்க தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லியின் இந்தியத் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த எப்பிஐ குழு 18ம் தேதி இந்தியா வரவுள்ளது.
சிகாகோ விமான நிலையத்தில் பிடிபட்ட ஹெட்லி லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கு தயாராகி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை விசாரிக்க இந்திய ஐபி-ரா அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றது. ஆனால், அவர்களுக்கு ஹெட்லியை விசாரிக்க அனுமதி தரப்படவில்லை. இதனால் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு சும்மா திரும்பி வந்தது அந்தக் குழு.
இந் நிலையில் ஹெட்லி குறித்து மேலும் விவரங்கள் அறிய ராபர்ட் முல்லர் தலைமையிலான அமெரிக்க எப்பிஐ குழு டெல்லி வரவுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த அமெரிக்கப் பிரஞையான ஹெட்லியும் கனடாவை சேர்ந்த பாகிஸ்தானிய நபரான ஹூசேன் ராணாவும் இணைந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு தயாராகி வந்தனர்.
இந்த ராணாவுக்கு அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானிய தூதரும் நெருக்கம் என்று தெரியவந்துள்ளது.
ஹெட்லி மும்பையில் 2 ஆண்டுகள் விசா ஏஜென்சி நடத்தி வந்த விவரம் எப்பிஐ சொல்லித் தான் இந்திய அதிகாரிகளுக்கே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹெட்லி மீது 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தாக வேண்டிய நிலையில் உள்ளதால் எப்பிஐ குழு இந்தியாவுக்கு ஓடி வருகிறது.
பயணிகளுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை:
இந் நிலையில் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா மையமான கோவா செல்லும் இங்கிலாந்து நாட்டினர் எச்சரிக்கையோடு இருக்குமாறு அந் நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை தீவிரவாதிகள் தாக்க சதி திட்டம் தீட்டி இருப்பதால் இந்த நகர்களுக்கும் கோவாவுக்கும் செல்பவர்கள் கவனத்துடன் இருக்குமாறு இங்கிலாந்து அரசின் வெளிநாட்டு சுற்றுலா தகவல் இணையத்தளத்தில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.