செய்யாறில் ரூ. 1500 கோடி முதலீட்டில் மகிந்திரா அன்ட் மகிந்திரா டிராக்டர் ஆலை
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ரூ. 1500 கோடி முதலீட்டில் பிரமாண்டமான டிராக்டர் தயாரிப்புப் பிரிவை தொடங்குகிறது மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனம்.
சென்னையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செய்யாறு.
சமீபத்தில் சென்னை அருகே உள்ள ஓரகடத்தில் நிஸ்ஸான்-ரெனால்ட் நிறுவனங்களுடன் இணைந்து கார் தயாரிப்புப் பிரிவை தொடங்கும் திட்டத்திலிருந்து விலகிக் கொண்டது மகிந்திரா. இந்த நிலையில் செய்யாறு பிரிவுக்கு அது முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் இதுதொடர்பாக மகிந்திரா நிறுவன அதிகாரிகள் குழு செய்யாறு சென்று ஆலை அமையும் இடம் குறித்த முழுமையான சாத்தியக் கூறு ஆய்வை மேற்கொண்டது.
இந்தத் திட்டம் முழுமையாக அமலுக்கு வருமானால் செய்யாறில் மிகப் பெரிய அளவிலான முதலீட்டை செய்யும் 2வது நிறுவனம் என்ற பெயர் மகிந்திராவுக்குக் கிடைக்கும். ஏற்கனவே, நைக் ஷூ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் இதை விட பெரிய முதலீட்டுடன் தனது உற்பத்திப் பிரிவை இங்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்திராவின் புதிய கார் தயாரிப்புப் பிரிவுக்குத் தேவையான 400 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் ஓரிரு மாதங்களில் கையெழுத்தாகவுள்ளது.
செய்யாறு பிரிவில் டிராக்டர்கள் தயாரிப்புக்கு மகிந்திரா முக்கியத்துவம் தரும் எனத் தெரிகிறது.