பொன்சேகா ராஜினாமா-அரசியலில் குதிக்கிறார்
அரசியலில் குதிக்கும் அவர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை இன்று அதிபர் ராஜபக்சேவிடம் அவர் வழங்கினார்.
சமீபகாலமாக அவருக்கும் அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையே மோதல் வலுத்து வந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார் பொன்சேகா. வரும் தேர்தலில் ராஜபக்சேவுக்கு அவர் பெரும் சவாலாக உருவெடுப்பார் என்று தெரிகிறது.
சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த பொன்சேகா ராஜபக்சேவையோ அல்லது அவரது தம்பிகளான பசில் ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே என யாரையும் சந்திக்காமல் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிபர் மாளிகையில் நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பொன்சேகா கலந்து கொண்டார். அதன் பின்னர் பொன்சேகாவும், ராஜபக்சேவும் தனியாக சந்தித்துப் பேசினர். பின்னர் பொன்சேகாவுக்கு ராஜபக்சே பகல் விருந்தளித்தார்.
அப்போது அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை பதவி விலக வேண்டாம் என பொன்சேகாவுக்கு ராஜபக்சே கோரி்க்கை விடுத்தார். ஆனால், அதை ஏற்க மறுத்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டார்.