ஈழத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட போப் வலியுறுத்தல்
வாடிகனில் உள்ள பால் 6 ஹாலில் ஆயிரக்கணக்கானோர் முன்பு போப் பெனடிக்ட் உரை நிகழ்த்தினார். அப்போது இலங்கைப் பிரச்சினை குறித்தும் அவர் பேசினார்.
போப் கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களை மறுகுடியேற்றம் செய்யும் அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
இந்த பணியை மேலும் விரைவுபடுத்த வேண்டும். அதைதான் நான் கோருகிறேன். மேலும், இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும், நாட்டின் வேகமான முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.
அனைவருக்கும் சமமான உரிமைகள் கிடைக்க வேண்டும். அனைவரின் மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. பிரச்சினைகளைத் தீர்க்க உரிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த நாடு (இலங்கை) இன்னும் சவால்களிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதை மனதில் கொண்டு அரசியல் தீர்வுக்கு அனைத்துத் தரப்பும் பாடுபட வேண்டும்.
இலங்கையின் மனிதாபிமான, பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக சமுதாயம் ஒருங்கிணைந்து உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்றார் போப்.