வாக்குறுதியை மீறிய ஆஸி. பிரதமர்-இந்தியர் குமுறல்
டெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், இனவெறித் தாக்குதல் தொடர்பாக அவர் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டதாக பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குமுறலை வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இன்று டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக நடந்து வரும் இனவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள், கெவின் ரூட் மீதான தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மெல்போர்ன் நகரில் இனவெறிக் கும்பலால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்ட 22 வயது சாய் ரத்னா திவாரி என்ற மாணவர் கூறுகையில், நான் கெவின் ரூடிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.
தாக்குதலில் ஈடுபட்டு வரும் கும்பலைத் தடுக்க உங்களது (ஆஸ்திரேலிய) அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. உங்களால் எங்களைப் பாதுகாக் முடியாவிட்டால் ஏன் எங்களை ஆஸ்திரேலியாவுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறீர்கள்.
உங்களது நாட்டைச் சேர்ந்தவர்கள் பிற நாடுகளில் தாக்கப்பட்டால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள். நாங்கள் இங்கு படிக்கத்தான் வந்தோம். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் நாங்கள் எப்படி படிக்க முடியும்?
தாக்கப்பட்ட இந்தியர்களுக்கு 1500 ஆஸ்திரேலிய டாலர்களைத் தருகிறீர்கள். ஒரு இந்தியனின் மதிப்பு அவ்வளவுதானா? என்றார் திவாரி.
இன்று இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை, கெவின் ரூட் சந்திக்கிறார். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து ஹைதராபாத் ஹவுஸில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.
முன்னதாக இன்று காலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்தார் கெவின் ரூட்.
இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் ரூட் சந்திக்கிறார்.
கெவின் ரூட் பிரதமரான பின்னர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இருமுறை அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.