தாய்-மகன் கொலை வழக்கு- நீதிமன்றம் கடும் கண்டனம்; போலீஸ் மீண்டும் விசாரணை
மேலும், தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று கூறப்படுவதை ஆதாரப்பூர்வமாக போலீஸ் தரப்பு மறுக்காதையும் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
சென்னை அசோக் நகரில் வசித்து வந்த அனந்தலட்சுமி, மற்றும் அவரது மகன் சூரஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்து இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் மருந்துக் கம்பெனியின் பிரதிநிதி, கேரளப் பெண் தான்யா உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர்.
வழக்கு முடிவுக்கு வந்ததாக அனைவரும் கருதிய நிலையில் திடீர் திருப்பமாக தனியார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்த வரதராஜுலு என்பவர் புதிய வீடியோ ஒன்றை பத்திரிகை மூலம் வெளியிட்டார்.
அதில், கைது செய்யப்பட்டுள்ள யாருமே உண்மைக் குற்றவாளிகள் இல்லை. உண்மையான குற்றவாளி இவர்கள் கிடையாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், வேறு சிலரை குற்றவாளியாகவும் அதில் சித்தரித்திருந்தார் வரதராஜுலு.
இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இது தவறு என்று கூறிய அவர்கள் அவசரம் அவசரமாக வரதராஜுலு மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரைப் பிடித்து உள்ளே தள்ளவும் முயற்சிகள் நடந்தன
இதையடுத்து வரதராஜுலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி சுதந்திரம், வரதராஜுலுவுக்கு முன்ஜாமீன் வழங்கி/lse'g இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் நடந்து கொண்ட விதம் குறித்தும் கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி கூறுகையில், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை நிரூபிப்பது புலனாய்வு அதிகாரியின் கடமையாகும். இதனை செய்ய போலீசார் தவறி விட்டனர்.
வீடியோவில் ஒருவர் அளித்த வாக்குமூலம் சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது. எனவே உண்மை வெளிவர சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு மறுபடியும் விசாரிக்கப்படவுள்ளது. கோர்ட்டின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால், விரைவில் உதவி ஆணையர் அந்தஸ்திலான அதிகாரியை நியமித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.