தமிழகத்திற்குத் தெரியாமல் அணைக்குள் 'ஊடுறுவிய' கேரளா
தேனி: தமிழக அதிகாரிகளுக்குத் தெரியாமல் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று கேரள அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
சமீபத்தில் பெய்து வந்த கன மழையால் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நல்ல நீர்வரத்து ஏற்பட்டது. பல அணைகள் நிரம்பின.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் கிட்டத்தட்ட 10 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தது. மேலும் தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர் மட்டம் 132.60 அடியாக இருந்தது. அணையில் இருந்து 1,418 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. முல்லைப் பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசித்து வரும் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் முல்லைப்பெரியாறு அணைக்கு கேரள நீர் பாசனத்துறை செயற்பொறியாளர்கள் நிர்மல் குமார், ஜார்ஜ் ஆகியோரது தலைமையில் குழு ஒன்று வந்தது. அக்குழுவினர் அணையின் முக்கிய பகுதிகள், பேபி அணை, மதகுப்பகுதி, கேலரி போன்ற இடங்களில் ஆய்வு நடத்தினர். நீர்மட்ட அளவையும் ஆய்வு செய்த அவர்கள் தமிழக அதிகாரிகள் மேற்கொண்டிருந்த அளவீடுகளோடு ஒப்பிட்டு பார்த்தனர்.
இந்த திடீர் ஆய்வு தொடர்பாக முறைப்படி தமிழக அதிகாரிகளுக்கு எந்தவிதமான தகவலும் தரவில்லை. கடந்த 2 மாதங்களில் பலமுறை இது போன்ற ஆய்வை கேரள அரசு மேற்கொண்டுள்ளது.
அதேசமயம், அணையின் ராரமரிப்புப் பொறுப்பை வைத்துள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடந்த மாதம் அணைப் பகுதிக்கு அனுமதிக்காமல், கேரள வனத்துறையினர் திருப்பி அனுப்பினர்.
இந்த திருட்டுத்தனமான ஆய்வு குறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், பெரியாறு அணையின் நீர்மட்டம் 134 அடியை எட்டியதும் கேரள பகுதிக்கு தண்ணீர் செல்ல தொடங்கி விடும். மேலும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவது குறித்தும், அணைப்பகுதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நீர்க் கசிவு உள்ளதா என்றும் கேரள நீர்ப்பாசனத்துறை விடுத்துள்ள உத்தரவின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
கேரள அதிகாரிகளின் இந்த ஊடுறுவல் ஆய்வு குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.