சுற்றுச்சூழல் பாதிப்பு- தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் தனியார் தொழிற்சாலையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், மேட்டுப்பாளையம் தொழிற் பேட்டையில் ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனால் இந்த தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த பிரச்னை சட்டசபையிலும் எதிரொலித்தது. இதனால் ஒரு வருடத்திற்கு இந்த கம்பெனி மூடப்பட்டது.
ஆனால், இந்த தொழிற்சாலையை சேதராப்பட்டில் உள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யும் வரை இந்த இடத்தில் இந்த தொழிற்சாலையை சுமார் ஒரு வருடத்திற்கு மட்டும் நடத்த அவகாசம் பெற்று, இயங்கி வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் பெய்த கடும் மழையால் கம்பெனியின் 50 அடி உயர புகைபோக்கி குழாய் உடைந்து விழுந்தது. இதனால், அதிக அளவு நச்சுப்புகை வெளியேறியது.
இதனால் கொந்தளித்துப் போன காந்தி திருநல்லூர் மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டதோடு, மேட்டுப்பாளையம் நான்கு ரோடு சந்திப்பில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிடப்பட்டது.