'கோடா'- விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் மகனுக்கு அடி
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா மீதான ஊழல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இடம் பெற்றுள்ள வருமான வரித்துறை இன்ஸ்பெக்டரின் மகன் தாக்கப்பட்டார்.
ரூ. 4000 கோடி அளவுக்கு பெரும் ஊழலில் ஈடுபட்டதாக மது கோடா மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளவருமான வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் ஏ.கே.மாஜி என்பவரின் மகன் அபிஷேக் மாஜி. இவர் செனாப் சாலையில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் அவரை கற்களால் தாக்கி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்று விட்டனர்.
அபிஷேக் மாஜி காயமடைந்து கீழே விழுந்த போதும் விடாமல் அவரைத் தாக்கியுள்ளனர். பின்னர் போகும்போது அபிஷேக்கின் செல்போனை பறித்துக் கொண்டு போய் விட்டனர்.
தலையில் காயமடைந்த அபிஷேக், டாடா மெயின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கோடா வழக்கை விசாரித்து வரும் குழுவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டரின் மகன் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.