பிஷப்புக்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்
சென்னை: பதவியிலிருந்து ஓய்வு பெற்றும் அதிலிருந்து விலக மறுத்து, பிடிவாதமாக தொடர்ந்து வரும் பிஷப்பை கண்டித்து சென்னையில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை சி.எஸ்.ஐ. பேராயராக தேவசகாயம் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தார். அவரது பதவி காலம் 1.5.09 அன்றுடன் முடிந்தது. ஆனாலும் அவர் பதவியில் தொடருவேன் என்று கூறி உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் என்று வழக்கு தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பிஷப் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரி கிறிஸ்தவ ஆயர்கள், சபை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை பேராய அலுவலகம் முன்பு போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராட்ட குழு தலைவர் மங்கள்ராஜ், தலைமையில் ஆயர்கள் கிதியோன் தைரியம், ஜான்விக்டர், சவுந்தரராஜன், மனோ சந்தோசம், கிறிஸ்டோபர் கிரிதரன், டேனியல், செல்லத்துரை, பால் வில்லியம், சிகாமணி, தினகரன், பால் நவராஜ் உள்பட 42 ஆயர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மங்கள்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளை மதிக்காமல் காபந்து பிஷப்பாக உள்ள தேவசகாயம் தொடர்ந்து தன்னை பிஷப்பாக பிரகடனம் செய்து தொடர்ந்து வருகிறார். அவரது பதவி காலம் முடிந்த பிறகும் கூட பிஷப்பாக இருப்பேன் என்று திருச்சபை சட்டத்துக்கு விரோதமாக நீதிமன்றம் சென்றுள்ளார்.
ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக அவர் கூறிய கருத்து கிறிஸ்தவ மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் உடனடியாக இந்த பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் விலகும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றார்.