ஜெய்ப்பூர் அருகே டெல்லி ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்கா பதக் என்ற இடத்தில் டெல்லி சென்று கொண்டிருந்த மன்டோர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜோத்பூர் - டெல்லி இடையிலான மன்டோர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஜெய்ப்பூர் அருகே உள்ள பான்ஸ்கா பதக் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டது.
இதில் ரயிலின் அனைத்துப் பெட்டிகளும் கவிழ்ந்தன. இந்த கோர சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த ரயிலில் ஐந்து ஏசி பெட்டிகள், ஏழு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள் உள்ளன.
ஜெய்ப்பூர் - ஜத்வாரா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் விபத்துக்குள்ளானது.
ஒரு ஏசி பெட்டி முழுமையாக தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைட்ராலிக் கட்டர்களை வைத்து கவிழ்ந்து விழுந்து கிடக்கும் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.