மேலூர் அருகே இந்தோனேசிய டிராக்டர் ஆலைக்கு இடம்: அழகிரி ஆய்வு
மதுரை: மதுரையைடுத்த மேலூர் அம்பலக்காரன்பட்டியில் அமையவுள்ள டிராக்டர் தொழிற்சாலைக்கான இடத்தை மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார்.
இந்தோனேசிய நிறுவனமான டெக்ஸ்மேக்கோ 266 ஏக்கர் பரப்பில் இந்த டிராக்டர் தொழிற்சாலையை அமைக்கிறது.
இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மு.க.அழகிரி, இந்தோனேசிய நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அழகிரி பேசுகையில்,
இந்தோனேசியா சென்றபோது அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்தேன். தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தேன்.
அதன்பேரில் அந்த நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனமான டெக்ஸ்மேக்கோ மதுரையில் டிராக்டர் தொழிற்சாலை நிறுவ முன் வந்துள்ளது.
இந்த தொழிற்சாலை அமையும் போது 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
டெக்ஸ்மேக்கோ இயக்குனராக உள்ள சீனிவாசன், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.