நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை-பயணிகள் பீதி
சென்னை: சென்னையிலிருந்து நாகர்கோவில் கிளம்பவிருந்த ரயிலின் ஏசி பெட்டியிலிரு்நது திடீரென புகை வெளிவந்ததால் பீதியடைந்த பயணிகள் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மாலை 6.10 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம்.
அதேபோல நேற்று மாலையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. 6 மணி அளவில் 3-ம் வகுப்பு பி-1, ஏசி பெட்டியில் உள்ள ஏ.சியில் இருந்த குளிர்ந்த காற்றிற்கு பதிலாக வெண்ணிற புகை வந்தது. அடுத்த சில வினாடிகளுக்கெல்லாம் புகை மூட்டம் வேகமாக பெட்டிக்குள் பரவியது.
இதனால் அங்கு அமர்ந்திருந்த பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தீப்பிடிக்கிறது தப்பித்து ஓடுங்கள் என்று ஒரு வாலிபர் வெளியே ஓடினார். இதையடுத்து மற்ற பயணிகளும் வெளியே ஓட முயன்றனர். இதனால் கூட்ட நெரிசலாகி விட்டது.
இந்த நிலையில் சில பயணிகள் உயிர் பிழைக்க வேண்டும் என்ற வேகத்தில் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து அதன் வழியாக வெளியே குதித்து ஓடினர். இதனால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த களேபரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரயிலின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த ஏசி மெஷினின் ஒரு பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு புகை மூட்டம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அந்த பெட்டிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்கசிவு சரி செய்யப்பட்ட பின்னர் சுமார் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
பழைய ரயில் பெட்டி ஒன்றை பராமரிப்பு பணிகள் செய்து புதிதாக இந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது. ஏசி பெட்டியில் தீ விபத்து ஏற்படுவது இதுவே முதல் முறை. எனவே இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் நிலையத்திலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதால் பெரும் உயிரிழப்பிலிருந்து தப்பியதாக பயணிகள் பீதி அகலாத கண்களுடன் தெரிவித்தனர்.