மறைமுக வரி வருவாய் 21 சதவீதம் குறைவு
டெல்லி: சர்வதேச பொருளாதார தேக்க நிலை மற்றும் அரசு அறிவித்த வரிச் சலுகை காரணமாக அரசுக்கு வர வேண்டிய மறைமுக வரி வருவாய் 21 சதவீதம் குறைந்துள்ளது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான 7 மாத காலத்தில் அரசுக்கு ரூ. 1.26 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதேகாலத்தில் கிடைத்த வரி வருமானம் ரூ. 1.61 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி வரி, சுங்க வரி மற்றும் சேவை வரி ஆகிய மூன்றும்தான் மறைமுக வரியாகும். இந்த மூன்று வரிகள் மூலம வரும் வருவாய்தான் கணிசமாகக் குறைந்துள்ளது.
சுங்க வரி வருவாய் 31.8 சதவீதமும், உற்பத்தி வரி 18.8 சதவீதமும் சேவைத் துறையில் 5.4 சதவீத வருவாய்க் குறைவும் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார தேக்க நிலையிலிருந்து உள்நாட்டு தொழில் நிறுவனங்களைக் காக்க அரசு இரண்டு கட்டமாக வரிச் சலுகை அளித்தது. இதன்படி உற்பத்தி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டது. சேவை வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டது.
வரி வருவாய் குறைவுக்கு இது மிக முக்கிய காரணமாகும். வரிச் சலுகை காரணமாக அரசின் வரி வருவாய் குறைந்து வருவதால் இதை எப்போது திரும்பப் பெறுவது என்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.