நிலவில் நிறையவே தண்ணீர் உள்ளது- நாசா ஆய்வு
நியுயார்க்: சந்திரனில் எதிர்பார்த்ததை விட அதிகளவு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்கிராஸ் என்ற ராக்கெட்டை நாசா நிலவுக்கு அனுப்பியது.
இந்த ராக்கெட்டில் இணைக்கப்பட்ட ஒரு கருவியை, சந்திரனில் சூரிய ஒளியே படாத பரப்பின் மீது விஞ்ஞானிகள் மோதச் செய்தனர். மோதலின் விளைவை, ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட படங்களை வைத்து நாசா வி்ஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு முடிவு குறித்து நாசா விஞ்ஞானி ஜான் லோக்ஸ்டோன் கூறுகையில், 'மிகக் குறைந்த அளவிலேயே நிலவில் தண்ணீர் இருப்பதாக இதுவரை நம்பியிருந்தோம். ஆனால் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வியக்கத்தக்க வகையில் உள்ளன.
ராக்கெட் மோதிய இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் குறைந்தது 25 கேலன் தண்ணீர் இருக்கக் கூடும். சந்திரன் வறட்சியான பாலைவனப் பகுதி என்ற கருத்து இதன்மூலம் சிதைக்கப்பட்டு விட்டது என்றார்.
சந்திரனில் தண்ணீர் இருப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, சந்திரன் தொடர்பான பல்வேறு புதிய ஆய்வுத்தளங்களுக்கு அடிப்படையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.