மழையால் வீடு இடிந்து 3 குழந்தைகள் பலி
தர்மபுரி: தர்மபுரி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தர்மபுரி அருகே உள்ள நொச்சிக் குட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். மனைவி பூங்கொடி. இவர்களின் மூன்று குழந்தைகள் இளவரசி (11), சிலம்பரசன் (9), அன்பரசி (4).
தர்மபுரியில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. இரவு 10 மணியளவில் மாடுகள் நனைந்து கொண்டு இருந்ததால் அவற்றை கொட்டகையில் கொண்டு வந்து கட்டுவதற்காக முருகேசனும், அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே சென்றனர்.
அந்த சமயத்தில், மழையில் ஊறிய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தூங்கிக்கொண்டிருந்த 3 குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.