தமிழர்களை மீட்க மறுத்த இந்தியா ராஜபக்சேவைக் காக்க துடிப்பது ஏன் - நெடுமாறன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறு இந்திய அரசுக்கு ராஜபக்சே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தியப் படை அக்டோபர் 15ஆம் தேதி ஆயத்த நிலையில் வைக்கப்பட்டதாக இலங்கை கூட்டுப்படைத் தளபதி பொன்சேகா அனுப்பியுள்ள தனது பதவி விலகல் கடிதத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பாக ராஜபக்சேவை நேரில் சந்தித்த போதும் பொன்சேகா கூறியபோது அதை மறுக்கும் வகையில் ராஜபக்சே எதுவும் கூறவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்கள ராணுவத்தினால் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு இந்திய அரசை தமிழக மக்கள் ஒன்றுபட்டு வற்புறுத்தியபோது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட முடியாது என இந்தியப் பிரதமர் மறுத்தார்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்யப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து கொல்லப்பட்ட போதும் ராணுவ ரீதியாகத் தலையிட மறுத்து இந்திய அரசு ராஜபக்சேவைக் காப்பாற்ற படையை ஆயத்த நிலையில் வைத்தது என்ற செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
மேலும் இலங்கைக்கு ராணுவ ரீதியாக உதவி எதுவும் செய்யவில்லை என்று இடைவிடாமல் மறுத்த வந்த இந்திய அரசு, தான் கொடுத்த இரு போர்க்கப்பல்களை திரும்பக் கேட்டுள்ளது என்ற செய்தியும் இந்திய அரசின் உண்மை உருவத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.
தமிழக மக்கள் இனியாவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.