முகாம் தமிழர்களைச் சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அனுமதி
கொழும்பு: வன்னியில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாம்.
மேலும் மறுகுடியேற்றம் செய்யப்பட்ட மக்களை சந்திக்கவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, துணுக்காய் ஆகிய இடங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதிநிதிகளும் அரசால் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 10 பேர் இக்குழுவில் இடம்பெறவிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை காலை 7.00 மணிக்கு ரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் வவுனியா புறப்பட்டுச் செல்லும் இவர்கள் வவுனியா விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
முதலில் மன்னார் செல்லும் இவர்கள் மக்கள் மறுகுடியமர்த்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் துணுக்காய் பகுதிக்கும் பயணம் செய்வர்.
பின்னர் கிளிநொச்சி செல்லும் இவர்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள மேனிக்பார்ம் முள்வேளி முகாம்களுக்குச் செல்லவுள்ளனர்.
திங்கட்கிழமை காலை முதல் மாலைவரை இப்பகுதிக்கு விஜயம் செய்யும் கூட்டமைப்பினர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுடனும் உரையாடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.