திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் - குப்தா ஆலோசனை
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் தொடப்பாக தூத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
திருச்செந்தூர் தொகுதி அதிமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவுக்குத் தாவி விட்டார். வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெயராமன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இதையடுத்து இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு தொகுதிகளுக்கும் சேர்த்து ஜனவரி மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக இன்று தூத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் சென்னையில் இருந்தபடி தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று ஆலோசனை நடத்தினார்.
வரும் 20ம் தேதிக்குள் இரு தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளிடயிட வேண்டும் என அப்போது கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஓட்டுப் பதிவை வீடியோவில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம், அவசியம் எனவும் வலியுறுத்தினார். மேலும் தேர்தல் அலுவலர்களாக மத்திய அரசு ஊழியர்களை நியமிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
விரைவில் இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.