3 மாதங்களில் ஊட்டி மலை ரயில் பாதை சரி செய்யப்படும் - ரயில்வே
மேட்டுப்பாளையம்: நிலச்சரிவால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஊட்டி மலை ரயில் பாதை இன்னும் 3 மாதங்களில் சரி செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட வட கிழக்குப் பருவ மழையின்போது மிகப் பெரிய அளவிலான சேதத்தை நீலகிரி மாவட்டம் சந்தித்தது.
பெரும் உயிர்ச்சேதம், பொருட் சேதம் ஒரு புறம் இருக்க, மலை ரயில் பாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது.
கல்லார், ஊட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக ரெயில் பாதையில், பெரிய, பெரிய பாறாங்கற்கள் விழுந்தன. மண் சரிந்து ரயில் பாதையை மூடியது. ரயில் பாதை ஓரங்களில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
பல மரங்கள் இன்னும் ரயில் பாதையின் குறுக்கே விழுந்து கிடக்கின்றன. நிலச்சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் போக்குவரத்து காலவரையின்றி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சேத விவரங்களை ஆய்வு செய்ய பொது மேலாளர் ஜெயந்த் மேட்டுப்பாளையம் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம், கல்லார், ஊட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதன் சேத மதிப்பு ரூ.11 கோடி இருக்கும் என்று தெரிகிறது.
நிலச்சரிவினால் ஏற்பட்ட சேதங்களை சீனியர் என்ஜினீயர் ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார். ரூ.11 கோடி மதிப்பிலான ரயில் பாதைகள், ரயில்வே குடியிருப்புகள் சேதம் அடைந்து இருக்கின்றன. பாலங்களும் சேதம் அடைந்து உள்ளன.
தற்போது மலை ரயில் பாதையில் விழுந்து கிடக்கும் பாறாங்கற்கள், மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ரயில் பாதையில் 3 பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதில் 66 எண் பாலம் காட்டாற்றில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. சில இடங்களில் தண்டவாளத்தை காணவில்லை.
ஒரு சில இடங்களில் தண்டவாளத்திற்கு அடியில் போடப்பட்டு இருக்கும் மணலை காட்டாற்று வெள்ளம் அரித்துச் சென்று இருக்கிறது. ரயில் தண்டவாளத்தையொட்டி அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவர்களும் வெள்ளத்தில் காணாமல் போய் இருக்கிறது. ஊட்டி மலை ரெயில் பாதை இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்.
இனி வரும் காலங்களில் ரயில் பாதையோரத்தில் உள்ள தடுப்பு சுவர் பலப்படுத்தப்படும். அடிக்கடி மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படுவதால் பெருத்த பொருட்சேதம் ஏற்படுகிறது.
மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து விரைவில் ஆய்வு நடத்த உள்ளோம்.
தற்போது மழை பெய்யாமல் இருந்தால் ரயில் பாதை பணியை விரைவில் முடிக்கலாம். இல்லையெனில், இன்னும் காலதாமதம் ஆகும்.
குன்னூர், அருவங்காடு வரை சிறு, சிறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. அதனை சரி செய்த பின்னர் சிறிய, சிறிய ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் இயக்கப்படும். அதற்கு உரிய ரயில் என்ஜின், ரயில் பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளதால் ரயிலை இயக்க இப்போது இடையூறு ஏற்பட்டு உள்ளது என்றார் ஜெயந்த்.