வைகை அணை நிரம்பி வழிகிறது - கரையோர மக்கள் வெளியேற்றம்
தேனி: வைகை அணை நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து அணைக்கு வருகிற நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
வைகை அணை நேற்று நிரம்பியது. இதையடுத்து 3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையடுத்து வைகைக் கரையோரம் வசிக்கும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி முதல் மழை பெய்தது. மழை 3 நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
தேனி மாவட்டத்தில் பிரதான அணையான வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 8-ந் தேதி நள்ளிரவில் அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
71 அடி உயர வைகை அணையில் மழைக்காலங்களில் 69 அடிவரை தான் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணை நீர்மட்டம் 68.5 அடியை தாண்டியதும் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று அணையின் நீர் மட்டம் 69 அடியைத் தாண்டியது. இதையடுத்து 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் அணைக்கு வரும் உபரி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.
அணைக்கு நேற்று காலையில் வினாடிக்கு 3 ஆயிரத்து 49 கன அடியாக நீர்வரத்து இருந்தது.
வைகைக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு தண்டோரா மூலம் ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவிக்க ஏற்பாடு செய்தனர்.
வைகை அணை நிரம்பியதைத் தொடர்ந்து அங்கு தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரன் விரைந்து வந்து பார்வையிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
27வது முறையாக நிரம்பியது...
வைகை அணை முழு அளவை எட்டுவது இது 27வது முறையாகும். அணையின் வரலாற்றில் இதுவரை அது 26 முறை நிரம்பியுள்ளது.