குன்னூரில் மண் சரிவில் சிக்கியது கார் - 3 பேர் பத்திரமாக மீட்பு
குன்னூர்: மண் சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குன்னூரில் கார் ஒன்று மண் சரிவில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அதில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வட கிழக்குப் பருவ மழையின் முதல் கட்டத்தில் நீலகிரி மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது. அதிலிருந்து இன்னும் அது முழுமையாக மீளவில்லை.
முதல் கட்ட மழையின்போது 43 பேர் மண் சரிவுக்குப் பலியானார்கள். சாலைகள் சேதமடைந்தன. ரயில் பாதைகள் சின்னாபின்னமாகியுள்ளன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்து போய் விட்டன.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓய்ந்திருந்த மழை கடந்த 13ம் தேதி முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியது. மழை போகப் போக வலுவடைந்ததால் மறுபடியும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
குன்னூரில் இருந்து பேரக்ஸ் செல்லும் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஒரு தனியார் விடுதியின் பக்கத்தின் பெரும் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக குன்னூர் அருகே உள்ள உபதலையை சேர்ந்த ஜெகதீஷ் (35), அவரது மனைவி புஷ்பா (25), நண்பர் ராமலிங்கம் (26) ஆகிய 3 பேரும் கோத்தகிரியில் இருந்து ஒரு காரில் குன்னூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்த கார் மண் சரிவில் சிக்கிக் கொண்டது. இதில் காரின் ஒரு பகுதியை மண் மூடியதால், தொடர்ந்து காரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களஅ 3 பேரும் சிக்கிக் கொண்டனர்.
காருடன் புதையும் அபாயமும் ஏற்பட்டது. இதையடுத்து உதவி கோரி அவர்கள் அலறினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தனர். தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கடுமையாகப் போராடி கதவைத் திறந்து 3 பேரும் பத்திரமாக மீட்டனர். பின்னர் காரை, கயிறு மூலம் கட்டி இழுத்து மீட்டனர்.
குன்னூரில் தற்போது மழை இல்லாவிட்டாலும் கூட ஆங்காங்கு மண் சரிவுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியுடன் உள்ளனர்.