கொச்சினில் முகாமிட்டிருந்த ஹெட்லி-ராணா: சிக்கும் கேரள நபர்
டெல்லி: கேரளாவைச் சேர்ந்த சமீர் என்பவருடன் லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லி, ராணா ஆகியோருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சமீரைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.
சமீர், இமிகிரேஷன் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருபவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டேவிட் ஹெட்லியும், ராணாவும், சமீருடன் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் இருவரும் கொச்சி வந்து தங்கியுள்ளனர். ராணா தனது மனைவியுடன் அப்போது வந்திருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
கொச்சியில் ராணா தங்கியிருந்தபோது அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணின் தகவல் தொடர்புகளில் சமீரின் எண்ணும் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக உளவுத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
மேலும் கைதாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட சமீருடன் ராணா பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
சமீர் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
லஷ்கர் அமைப்பின் தலைவரான ஷேக் அப்துல் ரஹ்மான் என்பவர் மூலமாக சமீருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர் ராணாவும், ஹெட்லியும் என்பதும் தெரிய வந்துள்ளது. ஹெட்லியும், ராணாவும் இந்த ரஹ்மான் தலைமையிலான பிரிவில்தான் இடம் பெற்றிருந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், லஷ்கர் ஆதரவு பிரிவுகள் கேரளாவில் இருக்கலாம் என சந்தேகப்படும் போலீஸார் அவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியை முடுக்கி விட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிமி அமைப்பின் முன்னாள் தலைவர் பஷீருக்கும், ஹெட்லி- ராணாவுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்குள் தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் ஆராய்ந்து வருகிறதாம் உளவுத்துறை.