ஆவேச-ஆபாச பேச்சு- மாரடோனாவுக்கு 2 மாத தடை, அபராதம்
கடந்த மாதம் உலகக் கோப்பை தகுதிப் போட்டி உருகுவேயில் நடந்தது. அப்போது உருகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா.
போட்டி முடிந்ததும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மாரடோனா, தனது விமர்சகர்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் கடுமையாக பாய்ந்தார்.
சில ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பத்திரிக்கையார்களையும் திட்டினார். இது நேரடியாக டிவிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஜூரிச்சில் கூடி மாரடோனாவின் செய்கை குறித்து விவாதித்தது. இந்தக் கூட்டத்தில் மாரடோனாவும் கலந்து கொண்டு தனது தரப்பு விளக்கத்தையும், மன்னிப்பையும் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. பின்னர் மாரடோனா கிளம்பிச் சென்று விட்டார்.
அதன் பின்னர் கால்பந்து சம்மேளனத்தின் முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி 2 மாதங்களுக்கு அவர் சர்வதேச போட்டிகள் எதிலும், எந்த நிலையிலும் கலந்து கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
முதலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் சில ஆட்டங்களில் அவர் அர்ஜென்டினா பயிற்சியாளராக கலந்து கொள்ள தடைவிதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாரடோனா மன்னிப்பு கேட்டதால் தடை லேசாக்கப்பட்டது.